இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் தலைவராக கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆளும் பா.ஜ.க.வை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணி இதுவரை மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. இக்கூட்டங்களில் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. எனினும், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், தொகுதி பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட 14 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் பொறுப்பை ஏற்க நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கார்கே பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்ததாக தெரிகிறது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தெரிவித்தால் இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக நிதிஷ் குமார் கூறியிருக்கிறார்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு