பெங்களூரு: பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா, சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் 26 எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை காப்பதே எங்கள் நோக்கம். ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக நாங்கள் ஒன்று சேரவில்லை. 26 கட்சிகள் இங்கு கூடியுள்ளன, 11 மாநிலங்களில் நாம் ஆட்சி செய்கிறோம். ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக நாங்கள் ஒன்று சேரவில்லை; அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை காப்பதே எங்கள் நோக்கம். பா.ஜ.க. கடந்த தேர்தலில் தனியாக 303 இடங்களை பிடிக்கவில்லை.
கூட்டணி கட்சிகளின் வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்துவிட்டு பின்னர் அவர்களை பா.ஜ.க. கழற்றிவிட்டுவிட்டது. இப்போது கூட்டணிக்காக ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க. தேசிய தலைவர் அலைந்து கொண்டிருக்கிறார். மாநில அளவில் எதிர்க்கட்சிகள் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேச நலன் கருதி கூடியுள்ளோம். மக்கள் நலனுக்காக கட்சிகள் இடையே உள்ள கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.