ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே விவசாய நிலத்தில் நாய் கடித்த நிலையில் புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெரியபாளையம் அருகே காரணி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நாய் ஒர் விலங்கை வேகமாக விரட்டி வந்தது. இதையறிந்த கிராம மக்கள் நாயை விரட்டி விட்டு பார்த்தபோது புள்ளி மான் என தெரிந்தது.
உடனே அப்பகுதி மக்கள் அந்த மானை மீட்டு செங்குன்றம் வனச்சரகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். வன அலுவலர் பாலகணபதி மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புள்ளிமானை மீட்டனர். மேலும் நாய் கடித்து காயமடைந்த மானை வனத்துறையினர் பெரியபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.