சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 168 பயணிகள் செல்ல இருந்தனர். இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம், ஓடுபாதையில் ஓட தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானி, அவசரமாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இழுவை வண்டி கொண்டுவரப்பட்டு, ஓடுபாதையில் நின்ற விமானத்தை, அது புறப்பட்ட இடத்துக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினர். இதையடுத்து விமானப் பொறியாளர்கள் விமானத்துக்குள் ஏறி, இயந்திர கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை இயந்திர கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால், விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 168 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உள்பட 180 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.