திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவிலிருந்து விலகிய சினிமா கலைஞர்கள் உள்பட பிரமுகர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வருவது தொடர்பாக இன்று திருவனந்தபுரம் வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கேரள பாஜகவிலிருந்து சமீபத்தில் பிரபல மலையாள சினிமா டைரக்டர்கள் ராஜசேனன், ராமசிம்மன் என்ற அலி அக்பர், பழம்பெரும் வில்லன் நடிகர் பீமன் ரகு ஆகியோர் விலகினர். இக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த டைரக்டர் மேஜர் ரவியும் விலகினார். இதுபோல் பல பிரபலங்கள் இக்கட்சியிலிருந்து விலகினர். அடுத்தடுத்து பாஜகவிலிருந்து முக்கிய பிரபலங்கள் விலகியது கேரளாவில் இக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைய வைக்க பாஜக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தேசிய தலைமையின் நேரடி தலையீட்டில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருவனந்தபுரம் வருகிறார். அவர் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தீர்மானித்துள்ளார்.