Friday, September 20, 2024
Home » வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

by Ranjith

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறியது: வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

வருடம்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வருட மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டும் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். எனவே இந்த வருடம் அதைவிட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று கருதுகிறோம். ஆடி மாதத்தில் நடை திறந்தபோது கூட எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைந்து செய்யப்படும்.

வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். தற்போது நிலக்கல்லில் 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இது 10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எருமேலியில் தற்போது 1100 வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இது 2000 ஆக உயர்த்தப்படும். சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதலாக நவீன வசதிகள் அமைக்கப்படும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

You may also like

Leave a Comment

twelve + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi