இம்பால்: மணிப்பூரில் நிலவி வரும் சூழல் குறித்து 10அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முதல்வர் பைரன் சிங் ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இனக்கலவரம் பல மாதங்கள் நீடித்தது. இதனால் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 180 பேர் பலியானார்கள். மெல்ல அமைதி திரும்பிவந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் அமைதியற்ற சூழல் நிலவி வருவதோடு, பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து முதல்வர் பைரன் சிங் தலைமையில் ஞாயிறன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ஒக்ராம் இபோயி, 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரதமரை சந்திக்க வேண்டும், பிரதமர் தலையீட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற 10 அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின\\” என்றார்.