ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் பராமரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், ஆண்டுதோறும் கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதங்ளில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.
கோடை சீசன் நெருங்கி வரும் நிலையில் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காக்களில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் மூடப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய மற்றும் பெர்ன் புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.