வேட்புமனு தாக்கல் 15ம் தேதி தொடங்கும் நிலையில் இலங்கை அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்சே மகன் நமல் போட்டி: கொழும்புவில் நடந்த கூட்டத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே போட்டியிட உள்ளதாக கொழும்புவில் நடந்த கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். பிரதமராக அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகினர். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்கே மற்றும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனா தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் தற்போதைய அதிபர் பதவிக்காலம் நவம்பர் 17ம் தேதியுடன் முடிவு பெறுவதையொட்டி, அதிபர், பிரதமர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக இலங்கை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில், ‘இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கொழும்புவில் நடந்த கூட்டத்தில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக, கட்சியின் தேசிய அமைப்பாளரும், மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதுகுறித்து பசில் ராஜபக்சே அளித்த பேட்டியில், ‘எதிர்வரும் அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் நமல் ராஜபக்சே போட்டியிடுவார். அதிபர் வேட்பாளராக தம்மிக்க பெரேராவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டது. அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியதால், நமல் ராஜபக்சேவை களமிறக்க கட்சி தீர்மானித்தது’ என்றார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நமல் ராஜபக்சே, சர்வதேச தொடர்பு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவும் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்த தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு