கொழும்பு: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த போது அரசுக்கெதிரான மக்களின் போராட்டமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து பயங்கர கலவரம் ஏற்பட்டதில் 9 பேர் பலியாயினர். கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மகிந்தா மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமறைவாகயிருப்பதாகவும், அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், மகிந்தா ராஜபக்சே, அபய குணவர்த்தனே எம்பி, அமைச்சர் பவித்ர வன்னியராச்சி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சனா ஜெயரத்னே உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை விதித்தது. இந்நிலையில், மகிந்தா உட்பட 4 பேரின் வெளிநாட்டு சுற்று பயண தடையை நீக்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட்டுகளையும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.