மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்பேன்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த 3 கட்சிகளும் இணைந்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இக்கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளுமே பெரிய கட்சிகள் என்பதால், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தன்னை முதல்வர் வேட்பாளராக்க வேண்டுமென உத்தவ் தாக்கரே கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அதனை ஏற்கவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு, எந்த கட்சி அதிக இடங்களில் ஜெயிக்கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவரே முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் தேர்வு செய்யும் எந்த முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் நான் முழு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை காப்பாற்றுவதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிர அரசு விளம்பரங்கள் மூலம் கட்டுக்கதைகளை பரப்புகிறது. மகாயுதி அரசு லட்கி பகின் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு ரூ.1,500 வழங்குகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அரசு மக்கள் பணத்தையே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.

Related posts

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

வளி மண்டல சுழற்சி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு