லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, மகாராஷ்டிராவில் வரும் அக்ேடாபர் மாதத்திற்குள் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுவதால், அது தொடர்பான அரசியலும் தீவிரமடைந்து வருகிறது. அஜித் பவார் அணியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சக்கன் புஜ்பால் அளித்த பேட்டியில், ‘எங்களது கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் 80 முதல் 90 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். பாஜக-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்த போது, எங்களுக்கு பேரவை தேர்தலில் 80 முதல் 90 சீட் தருவதாக உறுதி கூறினர். ஆனால் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன’ என்றார். இதுகுறித்து துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘பாஜக மிகப்பெரிய கட்சி; வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் போட்டியிடுவோம். எவ்வாறாயினும், மூன்று கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசித்த பின்னரே, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்’ என்றார்.