மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள துலேயில் உள்ள மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் பலஸ்னர் கிராமத்திற்கு அருகே காலை 10.45 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கபட்டது. கண்டெய்னர் லாரியில் பிரேக் பழுதடைந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் மற்றொரு கண்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர், நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அருகே இருந்த ஓட்டல் மீது லாரி மோதி கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை ஷிர்பூர் மற்றும் துலே மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.