மும்பை : மராட்டியத்தில் 21 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள மராட்டிய மாநிலத்தில் ஷிண்டே அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை துணை முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான அஜித் பவார் தாக்கல் செய்தார்.
அதில் இலவச மின்சாரம் வழங்குவதோடு 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டண நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதிநிலையில் அறிவித்தார். ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும், 10 லட்சம் இளைஞர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும், விரும்பும் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 10 ஆயிரம் பெண்களுக்கு பேட்டரி ரிஷா வழங்கப்படும், காட்டு விலங்குகள் தாக்கி இறந்தால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.