ராமநாதபுரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீர்நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். தொடர்ந்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். இதனால் ராமேஸ்வரம் முழுக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி பரிகார மண்டபங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மகாளய அமாவாசையை ஒட்டி ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானி கூடுதுறையில் திரண்டனர். கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.