கலசப்பாக்கம் : மகா சிவராத்திரியை முன்னிட்டு பர்வதமலை கோயிலில் பக்தர்கள் விடிய, விடிய காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் `தென் கைலாயம்’ என பக்தர்களால் அழைக்கப்படும் பர்வதமலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்பாள் உடனுறை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை முதல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. விடிய, விடிய பக்தர்கள் மலை மீது ஏறி சென்று, தாங்கள் கொண்டு சென்ற அபிஷேக பொருட்களை வைத்து பூஜை செய்தனர்.மேலும், செங்குத்தான கடப்பாரை படி மீது ஏறும்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என எழுப்பிய
கோஷம் விண்ணை பிளந்தது. இன்று, நாளையும் விடுமுறை என்பதாலும் மாசி மாத அமாவாசை என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மலை அடிவாரத்தில் வனத்துறை, காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களை சோதனை செய்து மலையேற அனுமதித்தனர்.
மேலும், மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் பக்தர்களின் கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.