Friday, September 20, 2024
Home » சிறுவர்களை ஈர்க்கும் மாக்துக்…அனைவரையும் கவரும் துப்கா…

சிறுவர்களை ஈர்க்கும் மாக்துக்…அனைவரையும் கவரும் துப்கா…

by Lavanya


மோமோஸ் சாப்பிட முறையான ஸ்பாட்!

சென்னையில் நாம் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டிருப்போம். கிரில் சிக்கன் சாப்பிட்டு இருப்போம். மந்தி பிரியாணி போன்ற பிரியாணி வகைகளைக் கூட சாப்பிட்டு இருப்போம். இவை அனைத்தும் இந்தியா, அரபு, சீன நாட்டு உணவுகள். இந்த உணவுகளைப்போல கடந்த சில வருடங்களாக நம் ஊரில் திபெத் உணவுகளும் கோலோச்சி வருகின்றன. பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். அதேவேளை ருசிப்பதற்கும் சுவையாக இருக்கும் இந்த திபெத்திய உணவுகள். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமான நம்ம சென்னையின் பல தெருக்களில் இப்போது திபெத் உணவான மோமோக்கள் விற்பனை ஆகின்றன. மக்களிடத்தில் மோமோவுக்கென்று ஒரு தனித்த இடமும் உருவாகி இருக்கிறது’’ என பேசத் தொடங்கினர் கே.கே.நகர் மீனாட்சி காலேஜ் எதிரில் அமைந்துள்ள மோமோ ஷாகாங் உணவகத்தின் உரிமையாளர்களான சக்திநாதன், ஈஸ்வர் ராஜ்குமார், ராகேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர். இவர்கள் நடத்தி வரும் இந்த உணவகத்தின் இன்டீரியர் அமைப்பே வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. சுவற்றைச் சுற்றிலும் மூங்கில்கள், அதற்கு மேல் திபெத்திய வாசகங்கள் அடங்கிய சிறிய பதாகைகள். திபெத்திய ஓவியங்கள், லைட் செட்டப்புகள் என வேற லெவலில் இருக்கிறது இன்டீரியர். இதை ரசித்தபடி உணவகத்தில் அமர்ந்திருந்த நம்மிடம் மேலும் சில தகவல்களைப் பகிரத் தொடங்கினார் ஈஸ்வரன்.

“நான், ராகேஷ், சண்முகசுந்தரம் ஆகிய மூவருக்கும் திருநெல்வேலிதான் சொந்த ஊரு. நாங்கள் குடும்பத்தோடு சென்னைக்கு வந்து மூன்று தலைமுறைகளுக்கு மேலாகிறது. சக்திநாதனுக்கு சொந்த ஊரு தஞ்சை. அவரும் மூன்று தலைமுறையாக சென்னையில் வசிக்கிறார். ஒவ்வொருவரும் வெளியில் தனியாக வேலை பார்த்து வருகிறோம். நான் லாயராக இருக்கிறேன். ராகேஷ் சிஏ முடித்திருக்கிறார். சக்தியும், சண்முகசுந்தரமும் இன்ஜினியர்கள். எங்களுக்கு சிறுவயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதுபோக புதியதாக ஒன்றை நம் ஊரில் லான்ச் செய்ய வேண்டும் என்ற விருப்பமும் அதிகமாக இருந்தது. அதற்காக தொடங்கியதுதான் மொமொ ஷாங்காய் உணவகம். இந்த உணவகத்தைத் தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. உணவகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை திபெத் ஸ்டைலில் மோமோஸ்தான் கொடுத்து வருகிறோம். மோமோஸ் அனைத்தையும் திபெத்தைச் சேர்ந்த தஷி என்பவர்தான் தயார் செய்கிறார். இவர் தென்னிந்தியாவில் பல இடங்களில் முதன்முதலில் மோமோஸை அறிமுகப்படுத்தியவர். கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடன் தஷி பயணித்து வருகிறார். இவர் கொடுக்கும் பார்முலாவில்தான் மோமோஸில் பெஸ்ட் ஸ்பாட்டாக எங்களது உணவகம் இருக்கிறது.

மோமோஸை நாங்கள் சாதாரணமாக ஆவியில் வேக வைத்து தருவது கிடையாது. மோமோஸ் தயாரிப்பதற்காகவே பிரத்தியேகமாக வடிமைக்கப்பட்ட ஸ்டிம்மரை மட்டுமே இதற்கு பயன்படுத்துகிறோம். பொதுவாக எந்தவொரு டிஷ்ஷாக இருந்தாலும் அதனை ஆவியில் வேக வைத்தோ, நெருப்பில் நேரடியாக சுட்டோ சாப்பிடும்போது உடலுக்கு எந்தவொரு உபாதையும் ஏற்படாது. வாடிக்கையாளர்களின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு நாங்கள் மோமோஸை ஸ்டிம்மரில் வேக வைத்து தருகிறோம். உணவகம் மாலை நான்கு மணிக்குக் தொடங்கி இரவு 10 வரை மட்டுமே செயல்படும். மோமோஸிற்கான மூலப்பொருளே மைதா மாவுதான். அதனால் மதியம் 12 மணிக்கு மைதா மாவைப் பிசையத் தொடங்கிவிடுவோம். மாலை நேரத்தில் வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வந்து ஆர்டர் செய்யும்போது நாங்கள் மைதாவிற்குள் தேவையான மசாலாவை ஸ்டப் செய்வோம்.பின்னர் அதனை 10 நிமிடம் ஸ்டிம்மரில் வேக வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம். வாடிக்கையாளர்கள் வெஜ் மோமோஸ் கேட்டால் அதில் கேரட் போன்ற காய்கறிகளை வைத்துக் கொடுப்போம். நான்வெஜ் பிரியர்களுக்காக சிக்கன் மோமோஸும் கொடுத்து வருகிறோம். இதுபோக ப்ரானையும் மோமோவிற்குள் ஸ்டப் செய்து தருகிறோம்.

என்னதான் மோமோஸைப் பார்த்துப் பார்த்து தயார் செய்தாலும், மோமோஸிற்கான சாஸ் மட்டுமே அதன் சுவையை முழுவதுமாக கொடுக்கும். பெரும்பாலான உணவகங்களில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டால் அதற்கு கொடுக்கப்படும் சாஸில் அதிகம் மிளகாயின் காரம் மட்டும் இருக்கும். இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது. நாங்கள் எங்களது உணவகத்தில் கொடுக்கும் சாஸில் அதிகம் மிளகாய் சேர்ப்பது கிடையாது. மோமோஸோடு சேர்த்து நாங்கள் தாங்துக் என்ற டிஷ்ஷூம் கொடுத்து வருகிறோம். இது நூடுல்ஸ் மூலம் செய்யப்படும் டிஷ். இந்த டிஷ் இந்தியாவில் இருக்கும் நட்சத்திர உணவகங்களில் மட்டுமே கிடைக்கும். பொதுவாக நூடுல்ஸ் என்றால் ஒரு பேனிலோ அல்லது சட்டியிலோ வேக வைத்து கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் நன்கு வேக வைத்த நூடுல்ஸை எடுத்து பதப்படுத்தாமல் ரூம் டெம்பரேச்சரில் வைத்தே தயார் செய்கிறோம். இதற்கான சாஸ் மற்றும் ஆயிலையும் நாங்கள் ரூம் டெம்பரேச்சரில் வைத்தே நூடுல்ஸோடு சேர்த்து மிக்ஸ் செய்து கொடுக்கிறோம். இந்த டிஷ்ஷின் பூர்வீகமும் திபெத்துதான். திபெத்தில் எந்தவொரு டிஷ் செய்தாலும் அது வேக வைத்தவுடன் ஆறிவிடும். மறுபடியும் அதனை பேனில் சூடு செய்யாமல் ஆறிய பிறகும் சாப்பிடுவார்கள். அப்படி ரூம் டெம்பரச்சேரில் ஒரு டிஷ்ஷை வைத்து செய்ய முடியும் என்றால் அது தாங்துக்.

நூடுல்ஸில் ஆயிலும், சாஸ்ஸும் இறங்கி இருக்கும். எண்ணெயை சூடு செய்யாமல் சாப்பிடும்போது அதன் சுவை நாவில் பட்டவுடன் தெரியும். இதனை சாஸோடு எடுத்து சாப்பிடும்போது அதன் சுவை நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இதில் மைல்டான சாஸ்ஸோடு கேரட், முட்டைக்கோஸ், ஸ்பிரிங் ஆனியன் மட்டுமே சேர்த்துக் கொடுக்கிறோம். பத்து நிமிடம் மட்டும் வேக வைப்பதால் இதில் இருக்கும் சுவையும் மாறாமல் நமக்கு கிடைக்கும்.எங்கள் உணவகத்தில் இரண்டு டிஷ்களை மட்டும் நாங்கள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்வது கிடையாது. அந்த இரண்டும் எங்களின் யுனிக் டிஷ். துப்கா, மாக்துக் என்ற இரண்டு டிஷ்கள்தான். துப்கா என்பது சூப், வெஜிடபிள், நூடுல்ஸ் ஆகியவற்றைக் கலந்து செய்வது. இதை ஒரு கப்பில் கொடுப்போம். மாக்துக் என்பது சூப், மோமோ, வெஜிடபிள் சேர்ந்த டிஷ். இதை ஒரே பவுலில் கொடுப்போம். இந்த இரண்டு டிஷ்ஷில் சூப்பில் மட்டும் மாற்றம் வரும். அதாவது வெஜிடபுள் சூப் கேட்பவர்களுக்கு காய்கறியும், நான்வெஜ் பிரியர்களுக்கு சிக்கன் சூப்பும் சேர்த்துக் கொடுப்போம். துப்காவை பெரியவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேபோல் மாக்துக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அருகில் கல்லூரி, பள்ளி இருப்பதால் மாணவர்கள் நிறைய பேர் எங்களது உணவகத்தைத் தேடி வருகிறார்கள். வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டவர்கள் வெளியில் சென்று சாப்பிடுவதற்கு பல காரணங்கள் இருக்க முடியும். ஒன்று வீட்டில் சமையல் செய்யாமல் இருக்கலாம். ஒரு மகிழ்ச்சியான தருணத்தை வெளியில் கொண்டாட வேண்டும் என்று நினைத்து வருபவர்களாகவும் இருக்கலாம். ஒரு புதிய டிஷ்ஷை சாப்பிட்டு பார்க்கலாம் என்ற யோசனையாக கூட இருக்கலாம். அப்படி எங்களை நம்பி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு டி‌ஷ்ஷையும் பார்த்துப் பார்த்து தயார் செய்கிறோம். மோமோ, நூடுல்ஸ் என்று அனைத்து டிஷ்ஷிலும் நாங்கள் காய்கறிகளை அதிகம் சேர்க்கிறோம். வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருப்பதால் நாங்கள் உணவகத்தை மதியம் 12 மணியில் இருந்து இரவு 2 மணி திறப்பதற்கான ஏற்பாட்டினையும் செய்து வருகிறோம்’’ என்கிறார்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: கிஷோர்

 

You may also like

Leave a Comment

twelve + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi