சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மதியம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்பட 117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 124 பேர் இருந்தனர். இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது தலைமை விமானியின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தில் மிகப்பெரிய அளவில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அபாய எச்சரிக்கை சிக்னல் வந்துள்ளது.
இதையடுத்து பரபரப்படைந்த தலைமை விமானி, அவசர அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின்பு விமானம் நேற்று பகல் 1 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, பழுது பார்க்கும் பணி நடந்தது. பிறகு மாற்று விமானம் மூலம் பயணிகள் மதுரைக்கு அனுப்பப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு குறித்து விமானிக்கு தகுந்த நேரத்தில் தகவல் கிடைத்ததாலும், விமானி எடுத்த துரித நடவடிக்கையாலும் விமானம் ஆபத்தில் இருந்து தப்பியது. நல்வாய்ப்பாக 124 பேரும் உயிர் தப்பினர்.