மதுரையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு ‘காலை உணவு திட்டம் அற்புதம்’ முதல்வருக்கு உ.பி எம்பி பாராட்டு

மதுரை: நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவினர் நேற்று 2வது நாளாக மதுரையில் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை சாப்பிட்ட உ.பி. எம்பி, முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார். நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவர் எம்.பி கனிமொழி தலைமையில், எம்பிக்கள் ஏகேபி.சின்ராஜ், ராஜ்வீர்டிலர், நரேந்திர குமார், தாளரிரெங்கையா, அப்துல்லா, கீதாபென்வாஜெசிங்பாய்ரத்வா, ஷியாம் சிங் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மதுரை வந்துள்ளனர். இக்குழுவினர் நேற்று முன்தினம் மதுரை விளாச்சேரி, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். நேற்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது குறித்து சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் மாணவ, மாணவியருக்கு உணவு பரிமாறினர். அப்போது உத்தரபிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி எம்பியும், பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) மக்களவை கட்சி தலைவருமான ஷியாம் சிங் யாதவ், உணவை சாப்பிட்டு பார்க்க விருப்பம் தெரிவித்தார். உடனே, எம்பிக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட எம்பிக்கள் காலை உணவுத் திட்டம் சிறப்பான திட்டம் என்றனர். எம்பி ஷியாம் சிங் யாதவ், கல்வி பயிலும் குழந்தைகள் நலனில் அக்கறையுடன் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக கூறினார். தொடர்ந்து நெல்பேட்டை பகுதியில் உள்ள காலை உணவு சமையல் அறைக்கூடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

* பெண் எம்பிக்களுக்கு கனிமொழி வளையல் பரிசு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த எம்பிக்கள், தரிசனம் முடித்தபிறகு, பெண் எம்பி கீதாபென்வாஜெசிங் பாய்ரத்வா மற்றும் உடன் வந்த ஆண் எம்பிக்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு அருகிலிருந்த வளையல் கடைக்குச் சென்று, வளையல்கள் உள்ளிட்ட அவர்கள் விரும்பும் பொருட்களை கனிமொழி எம்பி வாங்கிக் கொடுத்தார். மீனாட்சியம்மன் கோயில் சார்பில் வளையல் திருவிழா நடக்கும் அற்புத நகரான மதுரையின் பெருமையையும் கனிமொழி எம்பி, அவர்களுக்கு விளக்கினார். கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எம்பிக்கள் வளையல் கடைக்கு சென்று வளையல் வாங்கியதை சுவாரஸ்யமாக பார்த்து ரசித்தனர்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு