மதுரை: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (47). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் மதுரை மாநகராட்சியின் துணைமேயராக உள்ளார். இவரது மனைவி செல்வராணி. நேற்று மாலை இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துணைமேயர் நாகராஜன், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு கூச்சலிட்டார்.
இதனால் வெளியேறிய அந்த கும்பல், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டூவீலர்களை அடித்து நொறுக்கினர். பின் அங்கிருந்து கிளம்பிய மர்ம நபர்கள் துணைமேயர் அலுவலகத்திற்கு சென்று அலுவலகம், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் சேதப்படுத்தினர். அங்கு அக்கம்பக்கத்தினர் குவிந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். தாக்குதலை கண்டித்து எம்.பி சு.வெங்கடேசன் தலைமையில் கட்சியினர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (20) மற்றும் சீனி முகமது இஸ்மாயில் ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.