இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “ஆர்டிஓ தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 98 பேர் பங்கேற்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்னையை தவிர்த்திடும் வகையில், மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை எனப் பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவும், ஆலோசனைகளை வழங்க அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக” கூறப்பட்டது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு,”கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த எந்த தடையும் இல்லை. போட்டியின் போது தனிநபர்களோ, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாதவர்களோ பிரச்சினை, இடையூறு செய்யக்கூடாது. இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.