மதுரை: மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் விசாகா பெண்கள் தங்கு விடுதி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இந்த மகளிர் விடுதியில் கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். 3 பெண்கள் கரும்புகையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கி வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விடுதிக் கட்டடத்தை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா ஜெகதீஸ் மற்றும் விடுதி காப்பாளரான புஷ்பா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திடீர் நகர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த வார்டன் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.