இம் மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக இன்வெர்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எப்.எம். ரேடியோ, தொலைக்காட்சி, நூலகம், பொழுதுபோக்கும் இடம், சதுரங்கம், கேரம் பலகை, இறகுப்பந்து விளையாட்டு அரங்கம், நடைப்பயிற்சி பூங்கா, தியான மையம், யோகாஅறை போன்றவை அமைய டாக்டர் காந்திமதிநாதன் சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். இங்கு, காச நோயாளிகள் நீண்டகாலம் தங்கி கவலையின்றி மருத்துவம் செய்து கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பணிபுரிந்த காலத்தில் டாக்டர் காந்திமதிநாதன் இந்த மருத்துவமனையை தனது வீடு போலவும், நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவும் நேசித்து நோயாளிகள் விரைந்து குணமடைய காரணமாக இருந்துள்ளார்.
இத்தகைய சிறப்புக்கு காரணமான டாக்டர் காந்திமதிநாதன் கடந்த 30ம் தேதி அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுவதை தெரிந்து முதலமைச்சர் அவரை தன்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து டாக்டர் காந்திமதிநாதன் தமது குடும்பத்தாருடன் வந்து முதலமைச்சரை நேற்று நேரில் சந்தித்து பேசினார். டாக்டரையும், அவர்தம் குடும்பத்தாரையும் வரவேற்ற முதலமைச்சர், டாக்டர் காந்திமதிநாதனின் பணிகளைப் பாராட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
சேவையாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துகள்
மருத்துவர்கள் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தொண்டுள்ளமும் அர்ப்பணிப்பும் கொண்டு சேவையாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெறும் மருத்துவர்கள் அனைவருக்கும் “மருத்துவர்கள் நாள்” வாழ்த்துகள்! மதுரை தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையைத் தனது நிர்வாகத் திறனால் மேம்படுத்தி ஓய்வுபெற்றுள்ள மருத்துவர் காந்திமதிநாதன் அவர்களை நேரில் பாராட்டி மகிழ்ந்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.