Wednesday, July 3, 2024
Home » மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் காந்திமதிநாதன் ஓய்வு: வீட்டிற்கு அழைத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் காந்திமதிநாதன் ஓய்வு: வீட்டிற்கு அழைத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by MuthuKumar

சென்னை: தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள டாக்டர் காந்திமதிநாதனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மதுரை அருகே தோப்பூரில் 1960ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி அன்றைய முதலமைச்சர் காமராஜரால் அரசு காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களுக்கான தனித்தன்மை வாய்ந்த நெஞ்சக நோய் மருத்துவமனை திறக்கப்பட்டது. 115 ஏக்கரில் பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு 2013ம் ஆண்டு நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டவர் டாக்டர் காந்திமதிநாதன். அவரின் தன்னலமற்ற தியாக மனப்பான்மையுடன் கூடிய மருத்துவத் தொண்டுகளால் இந்த மருத்துவமனை மிகச்சிறந்த மருத்துவமனையாக வளர்ந்தது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இங்கு நிர்வாக அலுவலகம் அமையும் அளவுக்கு இந்த மருத்துவமனையின் தரம் உயர்ந்துள்ளது.

இம் மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக இன்வெர்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எப்.எம். ரேடியோ, தொலைக்காட்சி, நூலகம், பொழுதுபோக்கும் இடம், சதுரங்கம், கேரம் பலகை, இறகுப்பந்து விளையாட்டு அரங்கம், நடைப்பயிற்சி பூங்கா, தியான மையம், யோகாஅறை போன்றவை அமைய டாக்டர் காந்திமதிநாதன் சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். இங்கு, காச நோயாளிகள் நீண்டகாலம் தங்கி கவலையின்றி மருத்துவம் செய்து கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பணிபுரிந்த காலத்தில் டாக்டர் காந்திமதிநாதன் இந்த மருத்துவமனையை தனது வீடு போலவும், நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவும் நேசித்து நோயாளிகள் விரைந்து குணமடைய காரணமாக இருந்துள்ளார்.

இத்தகைய சிறப்புக்கு காரணமான டாக்டர் காந்திமதிநாதன் கடந்த 30ம் தேதி அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுவதை தெரிந்து முதலமைச்சர் அவரை தன்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து டாக்டர் காந்திமதிநாதன் தமது குடும்பத்தாருடன் வந்து முதலமைச்சரை நேற்று நேரில் சந்தித்து பேசினார். டாக்டரையும், அவர்தம் குடும்பத்தாரையும் வரவேற்ற முதலமைச்சர், டாக்டர் காந்திமதிநாதனின் பணிகளைப் பாராட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

சேவையாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துகள்
மருத்துவர்கள் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தொண்டுள்ளமும் அர்ப்பணிப்பும் கொண்டு சேவையாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெறும் மருத்துவர்கள் அனைவருக்கும் “மருத்துவர்கள் நாள்” வாழ்த்துகள்! மதுரை தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையைத் தனது நிர்வாகத் திறனால் மேம்படுத்தி ஓய்வுபெற்றுள்ள மருத்துவர் காந்திமதிநாதன் அவர்களை நேரில் பாராட்டி மகிழ்ந்தேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi