சென்னை: சென்னை, எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய், சென்னைப் பகுதியில் சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 100க்கும் குறைவானவர்களே இந்நோய் பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகளுக்கு மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. வரும் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 400க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களையும் கொண்டு 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.