திருவொற்றியூர்: மாதவரம் 200 அடி சாலை, ஆந்திரா பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோன் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் குடோன் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ பரவி, உள்ளே இருந்த பொருட்கள் மளமளவென எரிந்ததால் கரும்புகை வெளியேறி, சுற்றுப் பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
தகவலறிந்து மாதவரம், பாடி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக், மர பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.