சென்னை: மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதம் செய்யப்பட்டதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்க குறிப்பில், ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால், சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊடகங்களில் 7.06.2024 அன்று மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமாகிறது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
07.06.2024 ஆம் நாளன்று மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை காலதாமதமானதால் சிறிது நேரம் மொத்த விற்பனையாளர்களுக்கு(WSD) அனுப்பப்படும் வாகனங்கள் தாமதமாக பால் பண்ணையை விட்டு வெளியேறின. எனவே உடனடியாக அனைத்து மொத்த விற்பனையாளர்களுக்கும் முன்கூட்டிய தகவல் தெரிவித்து மேலும் பால் விநியோக வாகனத்தை தொடர்ந்து கண்காணித்து அனைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடமிருந்தும் எவ்விதமான புகார்களும் பெறப்படவில்லை என தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.