*நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேடசந்தூர் : வேடசந்தூர் அருகேயுள்ள மாமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்துடன், பசு, எருமை கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகளவில் சுற்றி திரியும் வெறிநாய்கள், அடிக்கடி கால்நடைகளை கடித்து வருகின்றன. கடந்த 20 நாட்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் பசு கன்று குட்டியை வெறிநாய் கடித்ததில் அது இறந்து போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வந்த வெறிநாய்கள் நாகராஜஜின் ஒரு பசு கன்று குட்டி, செல்வத்தின் ஒரு பசு மாடு, நடராஜின் 2 எருமகள், பழனிச்சாமியின் ஒரு எருமை, பாலசுப்பிரமணியின் ஒரு எருமை கன்று குட்டியையும் கடித்து குதறி விட்டு ஓடியது.
இதையறிந்த விவசாயிகள் தடியுடன், அந்த நாய்களை விரட்டி சென்றனர். ஆனால் நாய்கள் இவர்களையும் கடிக்க வந்ததால் திரும்ப வந்து விட்டனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயி நாகராஜ் கூறுகையில், ‘எங்கள் ஊருக்கு வரும் வழியில் பேரூராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இறைச்சி கடை உரிமையாளர்கள் பேரூராட்சி வாகனம் வரும் போது கழிவுகளை கொட்டாமல் மாலை நேரங்களில் கொண்டு வந்து இந்த ரோட்டில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏராளமான நாய்கள் இறைச்சி கழிவுகளை தின்று வெறிபிடித்து திரிகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அதிகமான இறைச்சி கிடைப்பதால் நாய்கள் வேறு பக்கம் செல்வதில்லை. மற்ற நாட்களில் கிராம பகுதிகளில் நுழைந்து பசு, எருமை மாடுகளை கடித்து வருகிறது. இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இதே நிலைமை நீடித்தால் ரோட்டில் நடந்து செல்லும் அனைவரையும் கடிக்க ஆரம்பித்து விடும்எனவே வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாகம் இறைச்சி கழிவுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார்.