இந்தூர்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இயங்கும் பயணிகள் ரயிலில் கடந்த திங்கட்கிழமை 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் 2 கைகள் மற்றும் 2 கால்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரித்து வரும் போது, ரிஷிகேஷில் இருந்து 1,150 கிமீ தொலைவில் அமைந்துள்ள மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மற்றொரு பயணிகள் ரயிலில் இருந்து பெண்ணின் மீதம் உள்ள உடல்பாகங்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து ரயில்வே போலீசார் குழப்பிப்போனார்கள். கண்டந்துண்டமாக வெட்டி 2 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணின் கையில் தேவநாகரி எழுத்தில் மீரா பென் மற்றும் கோபால் பாய் என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்தப் பெண் குஜராத் அல்லது மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இருமாநிலங்களையும் அதிர வைத்த இந்த கொடூர கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க உள்ளூர் போலீசார் உதவியுடன் ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இளம்பெண்ணை கொன்ற பிறகு உடலை கண்டந்துண்டமாக வெட்டி பயணிகள் ரயில்களில் வைத்து குழப்ப முயன்றதும் தெரியவந்தது. மேலும் பெண்ணின் உடல் கடினமான மற்றும் மழுங்கிய ஆயுதத்தால் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த சிக்கலான வழக்கில் பெண்ணின் கொலையில் தொடர்புடைய உறுதியான தகவலை தெரிவித்தால் ரூ.10,000 பரிசு வழங்குவதாக இந்தூர் ரயில்வே போலீஸ் எஸ்.பி சந்தோஷ் கோரி தெரிவித்தார்.