புதுடெல்லி: அடுத்த ஆண்டுக்கான ராணுவ தின அணிவகுப்பு நிகழ்ச்சி லக்னோவில் நடத்தப்படும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் வசமிருந்த இந்திய ராணுவ தலைமை பொறுப்புக்கு கடந்த 1949 ஜனவரி 15ம் தேதி ஜெனரல் கரியப்பா வந்தார். அந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் முறையாக பெங்களூருவில் ராணுவ தின அணிவகுப்பு நடந்தது. ராணுவ அணிவகுப்பை சுழற்சி முறையில் வெவ்வேறு பண்பாடு மற்றும் கலாச்சாரம் கொண்ட நகரங்களில் நடத்துவதால் ராணுவத்தின் பெருமை மற்றும் நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள், அதன் மூலம் தேசப்பற்று உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வரும் 2024 ஜனவரி 15 அன்று, மத்திய மண்டல ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள லக்னோவில் ராணுவ தின அணிவகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.