Monday, September 16, 2024
Home » மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.52,000க்கு கீழ் சென்றதால் நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: விற்பனை 10% அதிகரிப்பு

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.52,000க்கு கீழ் சென்றதால் நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: விற்பனை 10% அதிகரிப்பு

by Karthik Yash

சென்னை: தங்கத்தின் விலை 2வது நாளாக மீண்டும் அதிரடியாக குறைந்து சவரன் ரூ.52,000க்கு கீழ் சென்றது. இதனால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகைக் கடைகளில் விற்பனை 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது.

இதனால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் தற்போது தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக கிடுகிடுவென சரிய தொடங்கி உள்ளது. இதற்கு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைய தொடங்கியதும், நேற்று முன்தினம் தாக்கலான ஒன்றிய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பும் தான் காரணம். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, அன்றயை தினம் தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.6,550க்கும், சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400க்கும் விற்பனையானது.

இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து, ரூ.6,490க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.52 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.335ம், ஒரு சவரனுக்கு ரூ.2,680 வரை தங்கம் குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென சரிந்ததால் நகை கடைகளில் தங்கம் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தற்போதைய இறக்குமதி வரி குறைப்பால் தொடர்ந்து தங்கத்தின் விலை சரியலாம் என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் நேற்று தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.

இதுகுறித்து, நகைக்கடை வியாபாரிகள் கூறுகையில், ‘‘தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நேற்று காலையில் இருந்தே நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. தங்க நகைகள் விற்பனையும் அதிகரித்தது. இன்று மட்டும் தங்க நகைகள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது. இனிவரும் நாட்களில் தங்கம் விலை இதே நிலையில் நீடிக்குமானால் தங்க நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகளவில் தங்க நகையை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

You may also like

Leave a Comment

one + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi