தந்தையால் காதல் கணவர் கொல்லப்பட்டதால் வாட்ஸ்அப்பில் தோழிகளுக்கு படம் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை: நீ இல்லாத உலகில் வாழமுடியாது என உருக்கம்

திண்டுக்கல்: காதல் கணவர் கொல்லப்பட்ட சோகத்தில், அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வாட்ஸ்அப்பில் உறவினர்கள், தோழிகளுக்கு அனுப்பி விட்டு, மாணவி தற்கொலை செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே குன்னுவாரன்கோட்டையை சேர்ந்தவர் கபிலன் (22). சென்னை துறைமுக டிரைவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மாணவி அவருக்கு தங்கை முறை என கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு மாணவி வீட்டுக்கு இவர்களது காதல் விவகாரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டிக்கு சென்று அங்குள்ள அனுமார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த கபிலன், கடந்த 6ம் தேதி, மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் முறைப்படி பெண் கேட்டுள்ளார்.

அவரது தந்தை பெண் தர முடியாது என மறுக்கவே, கபிலன் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, கபிலனை அரிவாளால் வெட்டியுள்ளார். உறவினர்களும் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை உள்பட 3 பேரை விருவீடு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் உறவினரது வீட்டில் மாணவி தங்க வைக்கப்பட்டிருந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை அவர், வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கும், தோழிகளுக்கும், கபிலனுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் அதில், ‘கபிலன் இல்லாத உலகில் என்னால் இனி வாழ முடியாது’ என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, உறவினரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி