Thursday, July 4, 2024
Home » தனது 5 ஆண்டு காதலை ஏற்காததால் பெண் இன்ஜினியர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

தனது 5 ஆண்டு காதலை ஏற்காததால் பெண் இன்ஜினியர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

by Mahaprabhu

அம்பத்தூர்: மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மதுரை மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த பெண் இன்ஜினியர் இந்து (24, பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு எனது புகைப்படம் மற்றும் எனது சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து அனுப்பி மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணி விஜித்ரா விசாரணை நடத்தினார். அதில், புகார் அளித்த இந்துவுக்கு, திருப்பூர் மாவட்டம் பள்ளடம் கந்தசாமி கவுண்டன் தெருவை சேர்ந்த ருத்ரமணிகண்டன் (29) என்பவரின் செல்போனில் இருந்து ஆபாச புகைப்படம் வந்தது தெரியவந்தது. உடனே போலீசார், ருத்ரமணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, இவரது நண்பரான மதுரை மாவட்டம் அண்ணாநகர் பாண்டியன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த நவீன்ராஜ் (27), ருத்ரமணிகண்டன் செல்போனில் இருந்து ஆபாச புகைப்படங்கள் அனுப்பியது தெரியவந்தது.

உடனே நவீன்ராஜை பிடித்து விசாரணை நடத்திய போது, நவீன்ராஜ் மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, இந்து என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிக்கும் போதே, தனது காதலை இந்துவிடம் கூறியும் அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதன் பிறகு படிப்பு முடிந்து இந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார். தனது காதலியை மறக்க முடியாததால், நவீன்ராஜூம் சென்னைக்கு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டு, அடிக்கடி இந்துவின் தங்கும் விடுதி மற்றும் பணி செய்யும் அலுவலகம் அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. மேலும், நவீன்ராஜ் தனது 5 ஆண்டு ஒருதலை காதலை மறக்க முடியாமல், ஒரு கட்டத்தில் இந்து தங்கியுள்ள பெண்கள் விடுதியின் சுவரில், சினிமா பாணியில் தனது காதலை வெளிப்படுத்தி போஸ்டர் ஓட்டி காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இந்து, விடுதி வார்டனிடம் இதுபற்றி புகார் அளித்தார்.

அதன்படி விடுதி வார்டன் நவீன்ராஜை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் இனி தன்னை இந்து காதலிக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்த நவீன்ராஜ், இந்துவை பழிவாங்க தனது நண்பரான ருத்ரமணிகண்டனிடம் யோசனை கேட்டுள்ளார். அவர் கொடுத்த யோசனைப்படி, நவீன்ராஜ், பேஸ்புக் பக்கத்தில் இந்து தனது குடும்பத்துடன் பதிவு செய்திருந்த புகைப்படத்தை எடுத்து, அதில் இந்து மற்றும் இந்துவின் சகோதரியின் புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்து அதை நிர்வாணமாக மார்பிங் செய்து, கடந்த 9ம் தேதி இரவு ருத்ரமணிகண்டன் செல்போனில் இருந்து இந்து வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி மிரட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து நவீன்ராஜ் மற்றும் அவரது நண்பரான ருத்ரமணிகண்டன் ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐடி ஆக்ட் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆபாச படங்களை மார்பிங் செய்ய பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

thirteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi