திருமணம் முடிந்து 3 நாளில் காதல் தம்பதி வெட்டி படுகொலை: தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருமணம் முடிந்து 3 நாளில் காதல் தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி, மடத்தூர் சாலையில் உள்ள முருகேசன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் மாரிச்செல்வம் (24), டிப்ளமோ முடித்து விட்டு ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்கள், முருகேசன் நகருக்கு வருவதற்கு முன்பு திருவிக நகரில் குடியிருந்து உள்ளனர். அப்போது மாரிச்செல்வத்துக்கு இதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மாரிச்செல்வம், கார்த்திகா இருவரும் கோவில்பட்டி சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். அங்கிருந்து நேற்று மதியம் தூத்துக்குடி முருகேசன் நகர் வீட்டிற்கு வந்தனர். மாரிச்செல்வம் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை 6.30 மணியளவில் திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு பைக்கில் தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் காதல் தம்பதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து எஸ்பி பாலாஜி சரவணன் கூறுகையில், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள், என்றார். திருமணம் முடிந்து 3 நாளில் காதல் தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

* காரணம் என்ன?
கொலை செய்யப்பட்ட மாரிச்செல்வத்தின் பெற்றோர் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி திருவிக நகருக்கு வந்து குடியேறி உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் நகருக்கு இடம் பெயர்ந்தனர். கொலை செய்யப்பட்ட கார்த்திகாவிற்கு 2 சகோதரிகள் உள்ளனர். கார்த்திகா பட்டப்படிப்பு முடித்துள்ளார். காத்திகாதான் மூத்தவர் என்பதால் குடும்பத்தில் அனைவரும் அவர் மீது பாசமாக இருந்துள்ளனர். கொலையாளிகள் கார்த்திகாவின் உறவினர்களாக இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

கொலைக்கு காதல் திருமணம்தான் காரணமா? அல்லது இந்த காதலை பிரிக்க நினைத்த யாராவது கொலையை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் இந்த கொலையை செய்தது 5 பேர் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 5 பேர் வந்தார்களா? அல்லது 6 பேர் வந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் தூரத்திலேயே தாங்கள் வந்த பைக்கை நிறுத்தி விட்டு வந்து கொலையை செய்துவிட்டு சாவாகாசமாக தப்பி சென்றுள்ளனர்.

Related posts

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு

குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்