காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

*உறவினர்கள் திடீர் சாலை மறியல்

சோளிங்கர் : சோளிங்கரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா(26). அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(24). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதிக்கு 5 வயதில் ஆண், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ஜீவா தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜீவா நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தமிழ்ச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை ஆர்டிஓ ராஜராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே, தற்கொலைக்கு காரணமான ஜீவாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால், சோளிங்கர்- திருத்தணி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு