திருவிடைமருதூர், நவ.9: திருவிடைமருதூர்அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி லாரி மோதி பலியானார்.திருவிடைமருதூர் அருகே உள்ள அழகாபுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (52) கூலித்தொழிலாளி. இவர் அழகாபுத்தூர் பாலம் அருகில் உள்ள டீக்கடையில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரம் பைபாஸ் சாலையில் இருந்து நாச்சியார்கோவில் நோக்கி வந்த லாரி சாலையோரம் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மற்றும் கணேசன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.