தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் அருகே கடந்த 24ம் தேதி கர்நாடகாவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இரட்டை பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியும், காரும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த கோவையை சேர்ந்த மஞ்சு, விமல்குமார். இவரது மனைவி அனுஷ்கா, ஜெனிபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் 3 குழந்தைகள் உள்பட 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் சிகிச்சை பெற்று வந்த விமல்குமாரின் 4 மாத பெண் குழந்தையும் கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி டிரைவரான பென்னாகரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.