திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் ஒருவர் தனது டூவீலரில் பழைய இரும்பு வேலியை கயிறு மூலம் கட்டி நடுரோட்டில் இழுத்து சென்றார். அவ்வழியே சென்ற மற்றொரு வாகன ஓட்டி அவரிடம் பேச்சு கொடுத்தபடியே வீடியோ எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரிடம், ‘‘இந்த இரும்பு வேலியை எங்கிருந்து எதற்கு கொண்டு செல்கிறீர்கள்’’ என கேட்டார். அதற்கு அவர், ‘‘பூத்தாம்பட்டியில் இருந்து வேடசந்தூர் கொண்டு போறேன்’’ என்றார். ‘‘எதற்காக கொண்டு செல்கிறீர்கள்’’ என்றதற்கு, ‘மது வாங்க கொண்டு செல்கிறேன்.
ஒரு பாட்டில் விலை 140 ரூபாய், இந்த இரும்பு கம்பி 160 ரூபாய்க்கு வாங்குவார்கள்’’ என சிரித்தவாறு பதிலளித்தார். தொடர்ந்து அந்த நபர், ‘‘ஒரு குவாட்டர் போதுமா’’ என கேட்க, ‘‘ அது போதும்’’ என்கிறார். வீடியோவை எடுத்த இளைஞர், ‘‘தூள் கிளப்புங்கள்’’ என கூறி விட்டு சென்றார். மதுபிரியர் செய்த செயல் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், டூவீலரில் இரும்பு வேலியை கட்டி கொண்டு சென்ற அட்ராசிட்டியால் பிற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.