மீனம்பாக்கம்: லண்டனில் இருந்து நேற்று காலை சென்னை வந்த தமிழக பயணியின் கைப்பையை சோதனை செய்ததில் துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் நேற்றிரவு விசாரணைக்கு கூப்பிடும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைபேரில் போலீசார் விடுவித்தனர்.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான முனையத்தில் நேற்று காலை மதுரை செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தயார் நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த விஜயகிருஷ்ணா (35) என்பவரது கைப்பையை சோதனை செய்தபோது, அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதனால் பரபரப்பான பாதுகாப்பு அதிகாரிகள், விஜயகிருஷ்ணாவின் கைப்பையை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்தனர். 9 எம்எம் ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குண்டு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து விஜயகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ‘தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதாகவும், லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்து, தற்போது டிரான்சிட் பயணியாக மதுரைக்கு செல்ல உள்நாட்டு விமான முனையத்துக்கு வந்துள்ளேன்.
நான் அமெரிக்காவில் ரைபிஸ் கிளப் உறுப்பினர் என்பதால், தனது சொந்த உபயோகத்துக்காக அமெரிக்காவில் இருக்கும்போது ஆன்லைனில் துப்பாக்கி குண்டுகள் வாங்கியதாகவும், அதில் ஒரு குண்டு தவறுதலாக கைப்பையில் இருந்துள்ளது. அதை தான் கவனிக்காமல் எடுத்து வந்துவிட்டேன்’ என்றார். எனினும், விஜயகிருஷ்ணாவின் மதுரை பயணத்தை ரத்து செய்து, அவரையும் துப்பாக்கி குண்டையும் சென்னை விமானநிலைய போலீசில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து, விஜயகிருஷ்ணாவிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். மேலும், மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைபேரில் நேற்றிரவு விஜயகிருஷ்ணாவை போலீசார் விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.