அரசு மேல்நிலை பள்ளியில் லாலிபாப் சாப்பிட்ட 3 மாணவர்கள் மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை


தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள், வகுப்பறையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த 8ம் வகுப்பு மாணவர்கள் இருவர், 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் என 3பேர் நேற்று காலை 11:30 மணியளவில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மளிகை கடையில் 3 மாணவர்களும் லாலிபாப் வாங்கி சாப்பிட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், கடையில் வைத்திருந்த லாலிபாப் மிட்டாய் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கடையை மூடினர். இவர்களுக்கு மொத்தமாக மிட்டாய் விற்பனை செய்பவர்கள் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். லாலிபாப் சாப்பிட்டு மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது சாப்பிட்டு மயக்கம் அடைந்தனரா என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.