புதுடெல்லி: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளின் வெற்றி எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் ஆளும் பாஜ கட்சி 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை எட்டத் தவறியிருக்கிறது. கடந்த 2014ல் 282, 2019ல் 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையும் பாஜ கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தது. பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்றுள்ளன. இதன் மூலம் பாஜ கூட்டணி 292 தொகுதிகளுடன் 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்தியா கூட்டணியை பொருத்த வரையில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றி உள்ளது. கடந்த 2019ல் 52 தொகுதியில் வென்ற காங்கிரசுக்கு இம்முறை கூடுதலாக 47 தொகுதிகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக உபியின் சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. நாடு முழுவதும் அதிக தொகுதிகள் வென்ற கட்சிகள் பட்டியலில் பாஜ, காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுலை தொடர்ந்து, 22 தொகுதிகளுடன் திமுக 5வது இடத்தில் உள்ளது. இந்தியா கூட்டணியின் 234 ஆக உள்ளது. மற்றவை 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.