அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்.. முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி

டெல்லி : மக்களவையில், அவசர நிலை குறித்தும், இந்திரா காந்தியை கண்டித்தும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சு சர்ச்சையானது. நாடாளுமன்ற தொடக்க நாளில் அவசர நிலை குறித்து பிரதமர் பேசியது போல் சபாநாயகர் தனது பணியை தொடங்கிய முதல் நாளிலும் அவசர நிலை பற்றி பேசியுள்ளார். அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது நடந்தவற்றை பிரதமர் சுட்டிக்காட்டி கூறியதை சபாநாயகர் ஓம்பிர்லா குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் ஆட்சியில் 1975ம் ஆண்டு ஜூலை 25ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்து பேசுகையில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார். அப்போது சட்ட விரோத கைதுகள் நடந்தன. நாட்டையே சிறையாக மாற்றியது அவசரநிலை, நம் நாட்டில் அநியாயம் நிலவிய காலம் அது. அவசரநிலை பிரகடனம் அரசியல் சாசனம் மீதான தாக்குதல். அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம். அவசரநிலை காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது. அவசரநிலை கால கட்டம் பல இந்திய குடிமக்களின் வாழ்க்கையை அடியோடு அழித்துவிட்டது. பலர் உயிரிழந்துள்ளனர்.,”இவ்வாறு தெரிவித்தார்.

அவசரநிலையை கண்டித்து சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தை கண்டுகொள்ளாமல் சபாநாயகர் ஓம்பிர்லா தொடர்ந்து பேசினார்.பின்னர் அவசரநிலை காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!