இதில், திமுக கூட்டணியின் 40 எம்பிக்களும் நாளை பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நாளை மறுதினம் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். வரும் 27ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பிரதமரின் பதில் உரையும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கும். கடந்த 2 ஆட்சியிலும் பாஜ தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில் இம்முறை எதிர்க்கட்சிகள் கூடுதல் பலம் பெற்றிருப்பதால் அரசுக்கு கடும் சவாலுடனே மக்களவை தொடங்குகிறது.
இந்த நிலையில், மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்.பி. மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்த மஹ்தாப், அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்றார். தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே மரபுகளை மீறி தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதாக இண்டியா கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது. 8 முறை எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக 7 முறை எம்.பி.யாக இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்தததை கண்டித்து பதவியேற்பு விழாவை இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் குழுவில் இருந்து இண்டியா கூட்டணி விலகி உள்ளது.