இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கப்பட்டது. அப்போது சபாநாயகர் முடிவை கண்டித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இறுதியாக அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர். இதனிடையே வெளிநடப்பு செய்வதற்கு முன் நீட் முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “நாடாளுமன்றத்திற்கு நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். எனவே, நாடாளுமன்றம் இதனை விவாதிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் உரை மீதான பதிலுரை உள்ளதால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.