ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, ஒன்றிய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு பதிலடி தரும் வகையில் வேட்பாளரை நிறுத்தியது இண்டியா கூட்டணி. மக்களவை சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜகவின் பிடிவாதத்தால் சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் மனுதாக்கலின்போது உடன் இருந்தனர். 8-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.