புதுச்சேரி: புதுச்சேரி லாட்ஜில் ரகசிய கேமரா பொருத்திய வழக்கில் 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த லாட்ஜ் மேலாளர், ஊழியரை போலீசார் நேற்று கோவாவில் கைது செய்தனர்.புதுச்சேரி 100 அடி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ரெசிடென்சி ஓட்டலில் உழவர்கரையை சேர்ந்த ஒரு வாலிபர், தனது தோழியுடன் கடந்த ஜூலை 10ம் தேதி அறை எடுத்து தங்கினார். அப்போது அறையில் இருந்த எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக் பாயின்ட்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த வாலிபர், உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ரெசிடென்சி உரிமையாளர் இளைய ஆழ்வார் (45), ஊழியர் இருதயராஜ் (69) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், ரகசிய கேமரா பொருத்திய ஓட்டல் மேலாளர் ஆனந்த் (25), ஊழியர் ஆபிரகாம் (22) ஆகியோரை தேடி வந்தனர்.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆனந்த், ஆபிரகாம் ஆகிய 2 பேரும் கோவாவில் வாஸ்கோடகாமாவில் பதுங்கி இருப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவர்கள் 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.