லோகோ பைலட்டும், உதவியாளரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஆந்திர ரயில் விபத்தில் 14 பயணிகள் பலியானதற்கு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி என்ற இடத்தில் கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 பயணிகள் இறந்தனர். இவ்வழக்கு விசாரணை குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘விசாகப்பட்டினம் ரயில் விபத்துக்கு காரணம், லோகோ பைலட்டும், அவரது உதவியாளரும் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம்.

ரயில் விபத்துகளை தடுக்க புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார். ஆனால் ஆந்திர ரயில் விபத்து குறித்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர்கள் (சிஆர்எஸ்) விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கான காரணம் ரயிலின் லோகோ பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோரின் அலட்சியம் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

1,000 அம்ரித் ரயில்கள்: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், ‘வரும் ஆண்டுகளில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் 1,000 அதிவேக அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படும். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதல் ஏற்றுமதி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு