திருவனந்தபுரம்: கேரளாவில் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ சார்பில் கடந்த முறை தோல்வியடைந்த நடிகர் சுரேஷ் கோபி இம்முறையும் போட்டியிடுகிறார். இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான முன்னாள் அமைச்சர் சுனில்குமாரை இடதுசாரி கூட்டணி களமிறக்கியுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பிரதாபன் தான் இம்முறையும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வடகரை தொகுதி எம்பியான முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளீதரனை அதிரடியாக இந்தத் தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. மூன்று முக்கிய பிரபலங்கள் போட்டியிடுவதால் கேரளாவில் ஒரு பரபரப்பான தொகுதியாக திருச்சூர் மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று பாஜ வேட்பாளர் சுரேஷ் கோபி சாஸ்தாம்பூ என்ற இடத்திலுள்ள ஒரு ஆதிவாசி காலனிக்கு வாக்கு சேகரிக்க சென்றார். ஆனால் அந்தக் காலனியில் மக்கள் யாருமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சுரேஷ்கோபி கடும் ஆத்திரமடைந்தார்.
யாருமே இல்லாத இடத்திற்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்? உங்களுக்கு வேறு என்ன வேலை? இன்னும் நான் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. உங்களுக்கு தேவையில்லை என்றால் நான் தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன். திருவனந்தபுரத்திற்கு சென்று அங்கு போட்டியிடும் பாஜ வேட்பாளருக்காக நான் பிரசாரம் செய்து கொள்கிறேன் என்று தன்னுடன் வந்த பாஜ தொண்டர்களிடம் அவர் கோபத்துடன் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாஜ தொண்டர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.