Thursday, September 19, 2024
Home » கும்மிடிப்பூண்டி அருகே கோயில் கும்பாபிஷகத்தில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு: மறியல் போராட்டத்தால் பரபரப்பு; போலீசார் குவிப்பு; கருவறைக்கு சீல்

கும்மிடிப்பூண்டி அருகே கோயில் கும்பாபிஷகத்தில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு: மறியல் போராட்டத்தால் பரபரப்பு; போலீசார் குவிப்பு; கருவறைக்கு சீல்

by Karthik Yash

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கோயில் கும்பாபிஷகத்தின் போது சாமி தரிசனம் செய்வது தொடர்பாக, பட்டா வழி பாதையில் பட்டியலின மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பட்டியலின மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, எட்டியம்மன் கோயில் கருவறைக்கு இந்து அறநிலை துறை அதிகாரி முன்னிலையில் சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 1998ம் ஆண்டு கட்டப்பட்ட எட்டியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்லும் வழி தொடர்பாகவும், சாமி தரிசனம் செய்வது தொடர்பாகவும் பிரச்னை ஏற்பட்டு அன்றைய வருடமே கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பட்டியலின மக்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே சாமி கும்பிடுவது, பூஜைகள் செய்வது தொடர்பாக அதிகாரி தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பட்டியல் மக்களும் கோயிலில் பூஜை செய்ய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அப்போது பட்டியலின மக்கள் கோயிலுக்கு பூஜைகள் செய்ய இருதரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில் பிரச்னைகள் நடைபெறா வண்ணம் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்பினர் முதலிலும், பட்டியலின வகுப்பைச் சார்ந்த தரப்பினர் அதன் பின்னரும் கோயிலில் பூஜை செய்ய முன்னேற்பாடுகள் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படியே கோயில் நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றபோது மாற்று சமூகத்தை சேர்ந்த பலர் கோயிலுக்கு செல்லும் வழியானது பட்டா நிலம் எனக் கூறி பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல வழிவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருதரப்பினரிடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோயிலில் பூஜை செய்ய மறுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் அங்கிருந்து வந்து ரெட்டம்பேடு, கும்மிடிப்பூண்டி சாலையில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் சரவணகுமார், டிஎஸ்பி கிரியோசக்தி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து மீண்டும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது எங்கள் பட்டா நிலத்தின் வழியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என மீண்டும் வலியுறுத்தினர். அடுத்த கட்டமாக கோயிலுக்கு செல்ல வேறு வழி உள்ளதா என வருவாய்த்துறையினரிடம் கேட்டதற்கு, சில பகுதிகள் சேரும் சகதியுமாய் உள்ளது. அதன் வழியே செல்ல இயலாது என அரசு அதிகாரிகள் வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். அதன்பின்பு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார், கோயில் அருகே வந்தபோது ஊர் மக்கள் அனைவரும் ஓடி வந்து எட்டியம்மன் கோயில் வாசலில் அமர்ந்தபடி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் எட்டியம்மன் கோயில் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தையில், தற்பொழுது கோயில் கருவறை வாசல் மட்டும் வருவாய்த்துறை முன்னிலையில் சீல் வைக்கப்படும் எனவும், நீங்கள் முறையாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறினர். இதையடுத்து ஒரு பிரிவு மக்கள் கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து சென்றனர். அதன்பின்பு வட்டாட்சியர் சரவணகுமார் முன்னிலையில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கோயில் கருவறை மற்றும் நுழைவு வாயிலில் சீல் வைத்தனர். இதனால் ஊர் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi