புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ், பாஜ தனித்தனியாக இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது. இதனால் காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் பாஜவின் 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய, மாநில கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனால், கூட்டணி அமைப்பது, தொகுதிகளை பங்கீடு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பலவேறு பணிகளில் அந்த கட்சிகள் படு சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
முதல் ஆளாக பாஜ தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 2ம் தேதி வெளியிட்டது. அதில், பிரதமர் மோடி (வாரணாசி), ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா (காந்தி நகர்) என முக்கிய தலைவர்கள் உள்பட 195 பேர் அதில் இடம்பெற்றிருந்தனர். அதனை தொடர்ந்து 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இதில், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டமும் இன்று மாலை நடைபெற இருக்கிறது. அதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில், முதல்கட்ட வேட்பாளர்களை தேர்வு செய்வது, தொகுதிகளை ஒதுக்குவது, கூட்டணி பங்கீடு போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதனால், முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரசும், 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜவும் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜ வேட்பாளர் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு: தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜ தலைமையில், தமாகா, புதிய நீதிகட்சி, ஐஜேகே, சமக உள்ளிட்ட சிறிய கட்சிகள் தான் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால் வலுவான கூட்டணியை அமைக்க அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் பெரிய கட்சிகளை இழுக்கும் வேலையை பாஜ தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது வரை வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் பாஜ திணறி வருகிறது.
இந்தநிலையில், இன்று மாலை நடைபெறும் பாஜ ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இதனால், தமிழகத்தில் முதல்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜ இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு முடிந்த உடன் புதுச்சேரி உள்ளிட்ட மீதமுள்ள 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜ அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.